தமிழகத்தில் மேலும் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு – நாளை முதல் அமல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 12 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனை தடுக்க புதிதாக தலைமையேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தினார். ஆரம்பத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், பின்பு எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலானது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்தது. இதன் பலனாக தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது.
இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேர்வு!
எனவே பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மாநிலம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஏற்கனவே ஜூலை 19ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 12 நாட்கள் (ஜூலை 31 வரை) அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின் படி, 31-7-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து இயங்க தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை இயங்க தடை தொடர்ந்து அமலில் இருக்கும். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஜூலை 26 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கூடுதல் தளர்வுகள் ஆக, அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள் தட்டச்சு- சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.