தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 – டிஜிபி அறிவுறுத்தல்!
தமிழக அரசுத்துறை ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைத்து காவல்துறை ஊழியர்களுக்கும் தெரியும் வகையில் அதனை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
காப்பீட்டு திட்டம்
தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் பல்வேறு சலுகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை காவல்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ தேவைக்கு உதவும் விதத்தில் இலவச மருத்துவ காப்பீட்டு வசதியை அரசு வழங்கி வருகிறது. இந்த காப்பீட்டு திட்டமானது கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்- 2021 யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
இந்த காப்பீட்டு திட்டத்தில் உள்ள வசதிகள் ஜூலை 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையிலான 4 வருட தொகுப்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்கள் சுமார் 203 சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.5 லட்சம் ரூபாயும், 7 வகையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரையும் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர சில தீவிர நோய்க்கான சிகிச்சைகளுக்கு நிதித்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.20 லட்சம் வரை பண உதவி வழங்கப்படும்.
இந்த நோய்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ள குறிப்பிட்ட 1169 மருத்துவமனைகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை 1800 233 5666 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் கேட்டறிந்து கொள்ளலாம். இதனுடன் காப்பீட்டு திட்டம் குறித்த விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் படி ஒவ்வொரு காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் இதனை ஒட்டி வைக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.