தமிழகத்தில் ஜன.10 வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் நடத்தலாம்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை தாக்கம் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. பொதுத்தேர்வு எழுத இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2021-2022 கல்வியாண்டு தொடங்கும் சமயத்திலும் அதிக பாதிப்புகள் நிலவி வந்ததால் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.
மாநிலத்தில் அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதனால் தீவிர ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்தியாவில் டெல்டாவை போல பரவுகிறது ஓமிக்ரான் – மத்திய அரசு தகவல்! பொதுமக்கள் அச்சம்!
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் முன்னதாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் சுழற்சி முறை இல்லாமல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு வெளியிட்டுள்ள ஆணையின் படி, நர்சரி, மழலையர் பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை பள்ளிகள் நேரடியாக செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.