திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வோர் கவனத்திற்கு – டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்:
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதிக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு சேவைகள் பழையபடி துவங்கப்பட்டுள்ளன. அதாவது சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம், அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் துவங்கப்பட்டன.
தற்போது திருப்பதி ஏழுமலையானை கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.
ஆன்லைன் குலுக்கல் முறையிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஸ்ரீவாரி சேவை கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலனகர சேவை ஆகிய சேவைகளுக்கு இன்று பிற்பகல் 3 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. DIP முடிவுகள் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.