திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 8 முதல் டிக்கெட் விநியோகம் துவக்கம்!
திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தரிசனம் செய்யும் வகையில் மீண்டும் தரிசன டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையான் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை பெற பக்தர்கள் தங்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்? மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த கல்வித்துறை!
அதனை தொடர்ந்து 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்கும் விநியோகம் வழக்கம் போல ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுகான தரிசன டிக்கெட் துவங்கப்பட்டுள்ளது. 8 ஆம் தேதி முதல் டிக்கெட் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரம் டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெற்ற பக்தர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.