மே 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி முடிவு!
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறையும் பட்சத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
முழு ஊரடங்கு அமல்:
கொரோனா பரவல் கடந்த 2 வருடங்களாக கோரத் தாண்டவமாடி வருகிறது. இதற்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், பல வடிவங்களில் உருமாற்றம் அடைந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் பெய்ஜீங், ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக ஷாங்காய் நகரில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு தொடர்ந்து 6 வாரங்கள் அமலில் இருந்தது. இந் ஊரடங்கின் பலனாக ஷாங்காய் நகரில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, இதனால் ஷாங்காய் நகரில் வரும் ஜூன் 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் மே 28ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்தில் ஒரு அறிக்கையின்படி , பெய்ஜிங்கின் ஹைட்டியன் மாவட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர் .
மேலும், சாயாங், பெங்காசி, சன்னி மற்றும் பாங்ஷான் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நகர செய்தித் தொடர்பாளர் சூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பயிற்சி மையங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படும். இருப்பினும், 30 சதவீத மக்கள் பூங்காக்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெய்ஜிங்கின் 5 மாவட்டங்களில் வசிப்பவர்கள் அனைவரும் 28 ஆம் தேதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது