தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தது. மேலும் நாள்தோறும் உயிரிழப்புகளும் அதிகரித்ததால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் 2 வாரங்களுக்கு எவ்வித தளர்வுகளும் இன்றி கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்ட நிலையில் பின்னர் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டது. மறுபுறம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்தது. இதன் விளைவாக தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. எனவே மாநிலத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இருப்பினும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3வது அலையை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் படி ஆகஸ்ட் 9ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் தலைமை செயலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கொரோனா பரவலின் தற்போதைய நிலவரம், ஊரடங்கு நடைமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார். தற்போது சில மாவட்டங்களில் தொற்று விகிதம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.