தமிழகத்தில் மாநகராட்சிப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் பணி? வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக முறையை ரத்து செய்ய வேண்டும். இது, முறைகேடான பண பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் என்று வெளிநடப்பு செய்த சிபிஐ கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தற்காலிக ஆசிரியர்கள் பணி:
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் 119 தொடக்கப்பள்ளிகளும், 92 நடுநிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 2021-2022 கல்வி ஆண்டில் நடந்து முடிந்த 12ம் வகுப்புத் தேர்வில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.53% ஆக இருந்தது. இந்நிலையில், சென்னை பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில், சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வியின் தரம், தேர்ச்சி விகிதம், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் ஆலோசனையின் முடிவில், மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மேயர் அறிவித்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ(எம்) உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தியன் வங்கியில் புதிய அறிவிப்பு 2022- முழு விவரங்கள் இதோ
இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காவது வார்டு உறுப்பினர் “மாநகராட்சிப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்டோரை தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதில் சில அரசியல் விளையாட்டு இருக்கக் கூடும். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்றால், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியாக இருக்கும் இடத்திற்கு நியமிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே சம்பளம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். முன்னதாக, தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.