தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் ரத்து? திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,391 பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தற்காலிக ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என பல இடங்கள் காலியாக உள்ளது. வழக்கமாக ஆசிரியர்கள் TET தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,391 ஆசிரியர் பணியிடங்கள் மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ. 10000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ. 12000 என்ற அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர் நியமனம் அந்தந்த பள்ளி நிர்வாக குழு ஏற்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
எனவே, பல மாவட்டங்களில் பள்ளி நிர்வாக குழுவினர் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்து ஆசிரியர் பணி நியமனம் வழங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து உடனடியாக இந்த பணி நியமனத்தை நிறுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவை பிறப்பித்து இருக்கின்றனர். இந்த விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கல்வித்துறையின் முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் இந்த நியமனங்கள் நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.