அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம் – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் பதிவாளர் கருணாமூர்த்தி, பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. எனவே தற்போது நியமிக்கப்படும் துணைவேந்தர் தமிழகத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியம் என ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துணைவேந்தர் நியமனம்:
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. எனவே புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது. தற்போது வரை நாடு முழுவதும் இருந்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு தேர்வு செய்துள்ளது.
தமிழக தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து ஆளுநருக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியது. தலைசிறந்த, திறமையான, நேர்மையான கல்வியாளரை துணைவேந்தராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்களை துணைவேந்தராக தேர்வு செய்தால், பல்கலைக்கழக ஊழியர்களிடம் ஆலோசிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
TN Job “FB Group” Join Now
ஊழல் புகார் உள்ளிட்ட பலவற்றில் சிக்கிய முன்னாள் துணைவேந்தர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனவே தற்போது நியமிக்கப்படும் துணைவேந்தர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. தற்போது தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்குமான நேர்காணல் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.