டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான விசாரணைகளும், கைதுகளும் அடங்குவதற்குள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும் சில பயிற்சி மைய மாணவர்கள் மட்டும் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
வெளியாகியுள்ள கடிதம்..!
தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தின் சார்பில் ஜனவரி 11-ம் தேதி காவல்துறையினர்களுக்கான ஒதுக்கீடு தேர்வும், பொதுப்பிரிவினர்களுக்குமான தேர்வும் தனித்தனியாக நடைபெற்றது. இந்த தேர்வில் குறிப்பிட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் மட்டும் அதிக மதிப்பெண்கள் விதமாக முறைகேடு நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. இந்த சர்ச்சைக்குரிய கடிதமானது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவி்ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பகீர் குற்றச்சாட்டு கடிதம்..!
வெளியாகி உள்ள அந்த கடிதத்தில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டில் சிகரம் தொடு என்ற பெயரில் காவலர் தேர்வுகளுக்காக பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தேர்வு மையத்தில் இயக்குநர் செல்வம், தனது பயிற்சிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், சமீபத்தில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் 110 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பார்கள் என்று கூறியதாகவும் அதற்கான வழிகளை அவர்களே செய்து கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது.
அந்த பயிற்சி பள்ளியில் படித்த மாணவர்களுக்கு (70 பேருக்கு) தேர்வு நடைபெறும் நாளுக்கு (ஜனவரி 13) முன்பே 170 மதிப்பெண்களுக்கான மொத்த கேள்விகளில் 130 மதிப்பெண்களுக்குரிய கேள்விகளுக்கான விடைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு ஆகிய மையங்களில் காவலர் ஒதுக்கீட்டுக்காக நடைபெற்ற போலீஸ் எஸ்.ஐ தேர்வுகளில் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தேர்வு தாளை மாற்றி முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரை மறுத்துள்ள பயிற்சி மைய இயக்குனர், இந்த புகார் காழ்ப்புணர்ச்சி காரணமாக பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் புகார்களால் அரசுத் தேர்வு எழுதும் அனைவரும் அரசின் தேர்வாணையம் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.