தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு – போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை!
தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் அமலில் உள்ள நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய இயக்க நடைமுறைகளை போக்குவரத்து கழகம் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளது.
போக்குவரத்து கழகம்:
தமிழக முதல்வராக பொறுப்பேற்று உள்ள முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ.4000 போன்றவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்கிற அறிவிப்பு அன்றாடம் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசு சார்பில் கட்டணமில்லா பயணச் சீட்டும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
‘இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை’ – மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு!
இந்நிலையில் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் பெண்களிடம் நடத்துனர்கள் கோபமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் ஓட்டுனர்கள் முறையாக குறித்த பேருந்து நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தற்போது போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.
- ஓட்டுனர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ/ தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.
- நடத்துனர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக்கூடாது.
- வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
- பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ, பேசக்கூடாது.
- பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
- பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து ஒட்டுனருக்கு சமிக்ஞை (Signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.