தமிழக ஆசிரியர்கள் கட்சி பணிகளில் ஈடுபடக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் அரசு ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் தேர்தல் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் கலந்து கொள்ள கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி செயல்படும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, வேட்புமனு தாக்கல் என தேர்தல் களம் தீவிரமடைந்து வருகிறது. முன்னணி அரசியல் கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் வீதியில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக்கான தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நான்கு கட்டங்களாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் எந்தவொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆசிரியர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ எந்த கட்சியை ஆதரித்து பேசவோ, பிரச்சாரத்தில் ஈடுபடவோ கூடாது அது பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு எதிரானது என சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி சில பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,”அரசு பள்ளி ஆசிரியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாக இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை விதிக்கு மாறாக செயல்பட கூடாது. கல்வித்துறை சேர்ந்த பணியாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும்.
இதனை மீறி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசு ஆசிரியர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.