தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அத்துடன் தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தின் கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அதனால் தமிழகத்தில் பல வருடங்களுக்கு பிறகு கோடை காலத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இப்போது இந்த அறிக்கையில் உள்ள வானிலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
20.04.2022: தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.04.2022: தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.04.2022: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
23.04.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.04.2022: தென்தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை.