தமிழகத்தில் 12ஆம் வகுப்பு ரிசல்ட்டில் குளறுபடி? ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தில் 2021- 2022 கல்வியாண்டுக்கான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் குறைத்து வழங்கிய ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் இவ்வாறு மதிப்பெண்களை முறையாக வழங்க தவறுகின்ற போது அந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரி இடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ரிசல்ட்டில் குளறுபடி:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. இருப்பினும் 2021- 2022 கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவு வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று வழங்கப்பட்ட மதிப்பெண்களை பரிசோதித்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு செய்து உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை காட்டிலும் குறைவான மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகல் பெற்று பரிசோதித்ததில் மதிப்பெண்களை கூட்டி வழங்கியதில் ஆசிரியர்கள் செய்த தவறினை சம்பந்தப்பட்ட மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய தவறு பல நூறு மாணவர்களுக்கும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, மதிப்பெண்களை குறைத்து வழங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது. அதாவது பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் குறைத்து வழங்கிய ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.