தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19 ல் வெளியீடு? புதிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 19 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்குமான தேர்வுகளையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் 12 ஆம் வகுப்பு மாணவர்களது உயர்கல்விக்காக இறுதி மதிப்பீடுகள் அவசியம் என்பதால், அவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு செய்தது.
அந்த வகையில் புதிய கல்வியாண்டில் துவக்கத்திற்காக ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் இம்மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து +2 மாணவர்களுக்கு, அவர்கள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் 50% மும், 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20% மும், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற 30% மதிப்பெண்களை வைத்து இறுதி மதிப்பீடுகளை கணக்கிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்னாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி அன்று +2 மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.