நியூயார்க், நியூ ஜெர்சியில் அவசர நிலை அறிவிப்பு – அமெரிக்க இடா சூறாவளி!
அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா புயல்’ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடா சூறாவளி:
அமெரிக்காவில் இடா என்ற புயல் உருவாகியுள்ளதால் அங்கு பல மாகாணங்களில் மழை பெய்து வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாக தெற்கு மாகாணமான லூயிசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உண்டான வெள்ளத்தின் பாதிப்பை தெளிவாக உணர்த்தும் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான லூயிசியானா, மிஸ்ஸிசிப்பி, வட கிழக்கு அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரின் பல முக்கிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை வீடியோ எடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மெட்ரோ பாதை, சுரங்கம் என்று எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவது போல் பதிவுகள் உள்ளது. இதனால் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருவதக்கவும், கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார். நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த பகுதிகளில் மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் பாதிப்பினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மேயர், மக்களை வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், அப்படி தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும், சுரங்க பாதைகள், சாலைகளில் செல்வதை தவிருங்கள். வெள்ளம் ஓடும் சாலைகளில் பயணம் செய்யாதீர்கள் என்றும் மக்களை அறிவுறுத்தியுள்ளார். சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.