TNPSC இந்திய அரசியலமைப்பு – மாநிலச் சட்டமன்றம்

0
மாநிலச் சட்டமன்றம்
  • சரத்து 168-212 (பகுதி IV) வரை மாநில சட்டமன்றம் பற்றி குறிப்பிடுகிறது.
  • இரு சபைகளைக் கொண்ட சட்டமன்றத்தில் ஒரு சபை சட்ட மேலவை என்றும், மற்றொரு சபை சட்டப்பேரவை அல்லது கீழவை என்றும் வழங்கப்படுகின்றன.
  • தற்போதுபீகார், கர்நாடகம், மகாராஷ்டிரம்,உத்திரப்பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற 6 மாநிலங்கள் மட்டுமே இருசபைகளுடைய சட்டமன்றத்தைப் பெற்றுள்ளன.
  • மேலவை இருக்கின்ற இடங்களில் அதனை கலைத்து விடலாம் என்றோ, சட்டமேலவை இல்லாத இடங்களில் அதனை உருவாக்க வேண்டும் என்றோ சட்டப்பேரவையில் சிறப்பு பெரும்பான்மை மூலம் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம்.
  • அப்பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்றம் ஒரு மாநிலத்தில் உள்ள சட்டமேலவையைக் கலைத்துவிடலாம் அல்லது புதிதாக உருவாக்கலாம்(ஷரத்து 169)ஆக, மேலவை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநிலச் சட்டப்பேரவையிடமே உள்ளது.

சட்டமேலவை கலைப்பு

  • ஆந்திர சட்டமேலவை கலைப்பு – 1985
  • தமிழ்நாடு மேலவை கலைப்பு – 1986
  • பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் மேலவை கலைப்பு – 1969

சட்டப்பேரவையின் அமைப்பு

  • சட்டப்பேரவை மத்திய அரசாங்கத்தின் மக்களவை அமைப்பின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை பெற்ற வாக்காளர்கள் மாநிலச் சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • வயது வந்தோர் வாக்குரிமை என்ற அடிப்படையிலும், ரகசிய தேர்தல் முறையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • ஒரு மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 500க்கு மிகாமலும், 60க்குகுறையாமலும், மாநிலத்தின் தொகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவாகளைக் கொண்டு இருக்க வேண்டும்.
  • எனினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.
  • உதாரணம்: அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா மாநிலங்களில் குறைந்த பட்ச எண்ணிக்கை மிசோரம்40, நாகாலாந்து46.
  • மாநிலச் சட்டப்பேரவையில் ஆங்கிலோ-இந்தியருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என ஆளுநர் கருதினால் அச்சமுதாயத்தில் இருந்து ஒருவரை ஆளுநர் நியமிக்கலாம்.
  • மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்காகவும் அவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்ட மேலவை(Legislative Council)

  • மேலவை ஓர் அலங்கார சபையாக மட்டுமே உள்ளது. மேலும் இது நிலைத்திருப்பது என்பது கீழவையின் விருப்பதைச் சார்ந்திருக்கிறது.
  • அரசியலமைப்பின் ஷரத்து 169ன் படி, தொடர்புடைய மாநிலத்தின் சட்டப்பேரவை ஒரு தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்தால் பாராளுமன்றம் ஒரு சாதாரணச்சட்டத்தின் மூலம் சட்ட மேலவையை ஏற்படுத்தலாம்அல்லது ஏற்கனவே இருக்கின்ற மேலவையைக் கலைக்கலாம்.
  • சட்டசபையின் பரிந்துரையின் படியே பாராளுமன்றம் செயல்பட முடியும், மேலும் இப்பரிந்துரை மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

அமைப்பு

மேலவையின் உறுப்பினர்கள் சட்டசபையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் நாற்பதுக்குக் குறையாமலும் இருப்பார்கள். இயல்பாகவே, நேரடித்தேர்தல், மறைமுகத்தேர்தல் மற்றும் நியமனம் அடங்கிய ஒரு கலப்பு பிரதிநிதித்துவத்தால் அது அமைக்கப்படுகிறது. மேலவைக்கான தேர்தல்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையால் ஒற்றை மாற்று வாக்கு முறையில பின்வருகின்ற வகையில நடத்தப்படுகின்றன.

  • 1/3 பங்கு உறுப்பினர்கள் சட்டசபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • 1/3 பங்கு உறுப்பினர்கள் பாராளுமன்றச் சட்டத்தில் குறிப்பிட்டதைப் போல நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள் மற்றும் பிற உள்ளாட்சி ஆணையங்கள் போன்றவற்றால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • 1/12 பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகள் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • 1/12 பங்கு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர் மற்றும்
  • 1/6 பங்கு உறுப்பினர்களாக இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை மற்றும் கூட்டுறவு இயக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்கள் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
  • 5/6 பங்கு உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலமாகவும் 1/6 பங்கு உறுப்பினர்கள் நியமனம் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சட்டமன்றத்தின் ஆயுட்காலம்

  • இயல்பாகவே சட்டசபையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • இருப்பினும், பிரிவு 356ன் படி குடியரசுத் தலைவரால் மாநில நெருக்கடி நலை பிரகடனப்படுத்தப்படும் போது, எந்த நேரமும ஆளுநரால் சட்டசபை கலைக்கப்படலாம்.
  • பிரிவு 352ன் படி தேசிய நெருக்கடி நிலை அமலில் உள்ளபோது சட்டசபையின் பதவிக்காலம் ஓராண்டு வரை பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்படலாம்.

சட்டமேலவை பதவிக்காலம்

  • சட்டமேலவை கலைப்பிற்கு உட்படாத ஒரு தொடரும் அமைப்பாக உள்ளது. பாராளுமன்றத்தின் மாநிலங்களவையைப் போல, மேலவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் பதவி விலகுவார்கள்.
  • மேலவை உறுப்பினர்கள் ஆறு வருட பதவிக்காலத்தைப் பெற்றுள்ளார். மேலும் அவர் மேலவைக்கு மறுமுறை தேர்ந்தெடுக்கப்படலாம்.

தகுதிகள்

  • சட்டமேலவை சட்டசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஒரு நபர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • அவர் சட்டமன்றத்திற்கு 25 வயதும் சட்ட மேலவைக்கு 30 வயதும் நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
  • பாராளுமன்றத்தால் அவ்வப்போது ஏற்படுத்தப்படும் தகுதிகளும் அடங்கும்.

தகுதியின்மைகள்

  • மாநிலச் சட்டசபை உறுப்பினர்கள் பெறதகாத தகுதிகள் சிலவற்றை அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.
  • ஒருவர் சட்டசபையின் இருசபைகளிலும் உறுப்பினராக இருக்க முடியாது.
  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலச் சட்டமன்றங்களில் உறுப்பினராக இருக்க முடியாது.
  • மேலும் கீழ்காணும் வகையினர் மாநிலச்சட்டப் பேரவையிலோ அல்லது சட்டமேலவையிலோ உறுப்பினராக முடியாது.
  • இந்திய அரசாங்கத்திலோ அல்லது இந்திய அரசாங்கத்தின் அல்லது ஏதாவது மாநில அரசாங்கத்தின் ஊதியம் தரும் பதவியில் இருப்பவர்கள்.

அவையின் பணிகள் மற்றும் அதிகாரங்கள்

  • சாதாரண மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
  • சட்டசபையால் இயற்றப்பட்ட பண மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
  • சட்டசபையால் இயற்றப்படுகின்ற பண மசோதாக்களை 14 நாட்களுக்கும் சாதாரண மசோதாக்களை 4 மாதங்களுக்கும் அது தாமதப்படுத்தலாம்.
  • மேலவையின் தலைவரையும், துணைத் தலைவரையும் உறுப்பினர்களிடம் இருந்தே தேர்ந்தெடுக்கிறது.
  • பல்வேறு வகையான நடவடிக்கைகளுக்காக பல்வேறு குழுக்களை அது அமைக்கிறது.
  • ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்ட இடைக்காலச் சட்டங்களுக்கு மேலவை ஒப்புதல் அளிக்கிறது.
  • பொதுவாகவே, மேலவை ஒரு அலங்கால சபையாக மட்டுமே திகழ்கிறது. அதனால் அது ஒரு நலிந்த அவையாக கருதப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில், அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களில் அது பங்கேற்பதில்லை. கீழவையுடன் ஒப்பிடுகையில் மேலவை அதிகாரமற்றதாக உள்ளது.

சட்டமன்ற தலைவர்கள்

  • மாநில சட்டமன்றத்தின் ஒவ்வொரு அவையும் அதற்கென தனித்தனியே அவைத் தலைவரைக் கொண்டு செயல்படுகின்றன.
  • கீழவையான சட்டப்பேரவைக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரும் மேலவைக்கு மேலவைத் தலைவர் மற்றும் மேலவைத் துணைத் தலைவரும் அவையை தலைமை தாங்கி நடத்திச்செல்ல அந்தந்த அவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சட்டமன்றங்களில் சாதாரண மசோதாக்கள் நிறைவேற்றும் முறை

  • பண, நிதி மசோதா அல்லாத இதர சாதாரண மசோதாக்கள் சட்டசபையின் எந்தச் சபையிலும் அறிமுகப்படுத்தப்படலாம். ஒரு மசோதா சட்டசபையின் இரு சபைகளிலும் அல்லது இரு சபைகளும் ஏற்றுக் கொண்ட திருத்தங்களுடனோ நிறைவேற்றப்பட்டால் அம்மசோதா ஆளுநரின் இசைவோடு சட்டமாகின்றது.
  • இரு சபைகள் உள்ள மாநிலத்தில் ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்ட மேலவைக்கு அனுப்பப்படுகின்றது. சட்ட மேலவை அம்மசோதாவை நிராகரிக்கலாம் அல்லது மூன்று மாதங்கள் முடியும் வரை அம்மசோதாவை நிறைவேற்றாமல் வைத்திருக்கலாம் அல்லது சட்டப்பேரவை ஏற்றுக் கொள்ளாத திருத்தங்களுடன் சட்டமேலவை அம்மசோதாவை நிறைவேற்றலாம்.
  • மேற்கண்ட மூன்று செயல்களில் சட்டமேலவை எதைச் செய்தாலும், சட்டப்பேரவை மீண்டும் மசோதாவைச் சட்டமேலவை பரிந்துரை செய்த அல்லது ஒப்புக் கொண்ட திருத்தங்களுடனோ, அல்லது இல்லாமலோ நிறைவேற்றிச் சட்ட மேலவைக்கு அனுப்பி வைக்கும்.
  • இவ்வாறு இரண்டாவது முறை சட்டப் பேரவையினால் நிறைவேற்றி, அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை மேலவை நிராகரிக்கலாம். அல்லது ஒரு மாதம் முடியும் வரை மசோதாவை நிறைவேற்றாமல் வைத்திருக்கலாம் அல்லது சட்டப்பேரவை ஒத்துக் கொள்ளாத திருத்தங்களுடன் மசோதாவை நிறைவேற்றலாம்.
  • மேற்கண்ட முறைகளில் சட்ட மேலவை எதைச் செய்தாலும் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதா அதே வடிவில் அல்லது சட்டமேலவை பரிந்துரை செய்து சட்ட பேரவை ஒத்துக் கொண்ட திருத்தங்களுடன் மாநிலச் சட்ட சபையால் (அதாவது இரு சபைகளாலும்) நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
  • சட்டசபையினால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு மாநில ஆளுநர் இசைவை அளித்தால் சட்டமாகின்றது. ஆளுநர் அம்மசோதாவை இந்தியாவின் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது மசோதாவிற்கு சம்மதம் தர மறுக்கலாம். ஆளுநர் சம்மதம் தர மறுத்த மசோதாவை சட்டசபையின் மறுபரிசீலனைக்குத் திருத்தங்களுக்கான பரிந்துரையுடன் அனுப்பி வைப்பார்.
  • அம்மசோதாவை சட்டசபை மீண்டும் ஆளுநரின் சிபாரிசின் பேரில் திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பும். இவ்வாறு இரண்டு முறை சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் சம்மதம் தர மறுக்க முடியாது.
  • மாநில ஆளுநர் மாநிலச் சட்டசபை நிறைவேற்றிய ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் போது, குடியரசுத் தலைவர் அம்மசோதாவிற்கு சம்மதம் தரலாம் அல்லது அம்மசோதாவை சில திருத்தங்களுக்கான பரிந்துரையுடன் மீண்டும் சட்டசபையின் பரிசீலனைக்கு அனுப்பும் படி ஆளுநரைப் பணிக்கலாம்.
  • மாநிலச் சட்டசபை அம்மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் சிபாரிசு செய்த திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ நிறைவேற்றி மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும், அம்மசோதா இரண்டு தடவைகள் சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட போதிலும் குடியரசுத் தலைவர் அதற்குச் சம்மதம் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

பண மசோதா, நிறைவேற்றம்

  • பண மசோதாக்கள் மாநிலச் சட்ட மேலவையில அறிமுகம் செய்யப்படமுடியாது. சட்டப் பேரவையில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்படலாம். பண மசோதாக்கள் சட்டப் பேரவையில் அறிமுகம் செய்யப்படு முன் அவை மாநில ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
  • பேரவையில் நிறைவேறிய மசோதா பின் மேலவையில் அறிமுகம் செய்யப்படும். அந்நிலையில் மேலவை திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றலாம் அல்லது 14 நாட்கள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வைத்திருக்கலாம் அல்லது 14 நாட்களுக்குள் திருத்தங்களை பரிந்துரைக்கலாம்.
  • மேலவை பரிந்துரைக்கும் திருத்தங்களை முழுமையாகவோ அல்லது ஒரு சில பகுதிகளையோ ஏற்றுக் கொள்ளவும் அல்லது நிராகரிக்கவும் சட்டப் பேரவைக்கு அதிகாரம் உண்டு.
  • மசோதாவை மேலவை 14 நாட்களுக்குள் திருப்பி அனுப்பவில்லை என்றால் அம்மசோதா இரு சபைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். பின்னர் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பண மசோதாக்களுக்கு ஆளுநர் சம்மதம் தர மறுக்க முடியாது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பின்பற்றப்படும் முறையே இங்கும் பின்பற்றப்படுகிறது.
  • பண மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் போது அவர் அதனை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம், ஆனால் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்ப இயலாது.

சட்டமியற்றலில் சட்டப்பேரவைக்கும், மேலவைக்கும் இடையிலான உறவுகள்

  • பண மசோதாக்களைப் பொறுத்தவரை, அவற்றை நிறைவேற்றுவதற்கான முழு அதிகாரத்தையும் சட்டப்பேரவையே பெற்றுள்ளது. சட்ட மேலவை திருத்தங்கள் மட்டுமே பரிந்துரை செய்யலாம். அதை அப்படியே நிராகரிக்கும் அதிகாரம் சட்டப் பேரவைக்கு உள்ளது.
  • ஆனால் சட்டமேலவை பண மசோதாவை நிறைவேற்றுவதற்கு 14 நாட்கள் வரை தாமதப்படுத்தலாம். ஆயினும் 15ம் நாள் அம்மசோதா சட்டமன்றத்தின் இரு சபைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும்.
  • சாதாரண மசோதாக்களை நிறைவேற்றுவதிலும் சட்டப்பேரவையின் அதிகாரமே முடிவானது. அவ்வகை மசோதாக்களை சட்டமேலவை முதல் கட்டத்தில் 3 மாதங்களும், இரண்டாவது கட்டத்தில் 1 மாதமும் தாமதப்படுத்தலாம்.
  • திருத்தங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரத்தை சட்ட மேலவை பெற்றிருந்தாலும் 4 மாதத்திற்குப் பிறகு சட்டப் பேரவையின் விருப்பமே நிறைவேறும் நிலை உள்ளது. இரு சபைகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டால் அதனைத் தீர்க்க இரு அவைகளின் கூட்டுக் கூட்டததை கூட்டுவதற்கான ஏற்பாடு ஏதும் இல்லை.

சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உறவுகள்

  • சாதாரண மசோதாக்கள் இரு அவைகளிலும், அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படலாம். ஆனால் முரண்பாடு ஏற்பட்டால் சட்டப்பேரவையின் விருப்பமே மேலோங்கி இருக்கும்.
  • ஆளுநரின் அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல்.
  • முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் இரு அவைகளில் ஏதேனுமொன்றில் இருந்து தேர்வு செய்யப்படலாம். எனினும் அவர்கள் சட்டப்பேரவைக்கு மட்டுமே கூட்டுப் பொறுப்புடையவர்கள்
  • மாநில நிதி ஆணையும், பொதுப்பணி ஆணையும், இந்திய அரசுக் கணக்காய்வர் மற்றும் தணிக்கையாளர் ஆகியோரின் அறிக்கைகளைப் பரிசீலனை செய்தல்.
  • மாநில பொதுப்பணி ஆணையத்தின் பணி வரம்பினை நீட்டித்தல்.

சம அதிகாரம் இல்லாத விஷயங்கள்

  • பண மசோதாவை சட்டப் பேரவையில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும். மேலவையில் அறிமுகப்படுத்த இயலாது.
  • பண மசோதாவை மேலவை திருத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. 14 நாட்களுக்குள் பரிந்துரைகளுடன் அல்லது பரிந்துரை இல்லாமல் பேரவைக்கு திருப்பி அனுப்பி விட வேண்டியது.
  • சட்டப் பேரவை மேலவையின் பரிந்துரைகளை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அந்த வகையிலும் பண மசோதா இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும்.
  • ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பதை சட்டப் பேரவைத் தலைவரே தீர்மானிப்பார்.
  • சாதாரண மசோதாக்களைப் பொறுத்த மட்டில் பேரவையின் விருப்பமே வெற்றி பெறும் சட்டப் பேரவையில நிறைவேற்றப்பட்டு மேலவைக்கு அனுப்பப்பட்ட மசோதா நிறைவேறுவதை முதல் கட்டத்தில் 3 மாதமும், இரண்டாவது கட்டத்தில் ஒரு மாதமுமாக நான்கு மாத காலம் தாமதப்படுத்த மட்டுமே மேலவையால் முடியும்.
  • பட்ஜெட் அறிக்கை மீது மேலவை விவாதம் நடத்தலாம். ஆனால் மானியக் கோரிக்கைகள் மீது வாக்களிக்க முடியாது.
  • அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கம் செய்ய முடியாது. ஏனெனில் அமைச்சரவை சட்டப் பேரவைக்கு மட்டுமே கூட்டுப் பொறுப்பு உடையதாகும்.
  • சட்டமேலவையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு சாதாரண மசோதா, சட்டப் பேரவையால் நிராகரிக்கப்பட்டு விட்டால் அத்துடன் அம்மசோதா முடிவிற்கு வந்துவிடும். முரண்பாட்டை தீர்த்து அம்மசோதாவை இரு அவைகளும் நிறைவேற்ற வழியில்லை.
  • குடியரசுத் தலைவர் தேர்தலிலும், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் சட்ட மேலவை பங்கேற்பதில்லை.
  • இறுதியாக, சட்டமேலவை தொடர்ந்து இருப்பதே சட்டப்பேரவையின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். பேரவை விரும்பினால் ஒரு தீர்மானத்தின் மூலம் மேலவையை கலைத்து விடுமாறோ அல்லது உருவாக்குமாறோ பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்ளலாம்.
  • சட்டமேலவையின் மேற்கண்ட நிலையினை நோக்கும்போது அது, அதிகாரமற்ற, முக்கியத்துவம் அற்ற, ஓர் அலங்கார அமைப்பாக, சட்டநிறைவேற்றத்தை தாமதப்படுத்துகிற அமைப்பாக மட்டுமே விளங்குவதை உணரலாம்.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PDF Download 

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
TNPSC Current Affairs in Tamil 2018

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!