நகரம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – போராட்டம் எதிரொலி! அரசு அதிரடி நடவடிக்கை!
வரலாறு காணாத வகையில், இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவு காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ரம்புக்கனா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து தற்போது முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பற்றாக்குறைக்கு மத்தியில் நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இன்று (ஏப்ரல் 20) மத்திய பகுதியில் காவல்துறையினர் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச கண்டனத்தைத் தூண்டிய ஒரு நாளுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 1948ல் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார வீழ்ச்சியின் பிடியில் தற்போது சிக்கி இருக்கிறது.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசு வழங்கும் உதவித்தொகை!
வழக்கமான மின்தடைகள், எரிபொருள், பிற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஆகியவை இந்த நெருக்கடிகளுக்கான முக்கிய காரணியாகும். இப்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விலை உயர்வை எதிர்க்கும் மக்கள், மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கலைப்பதற்கு காவல்துறையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
அந்த வகையில் தலைநகர் கொழும்புவில் இருந்து கிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரம்புக்கனா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்த மோதலில், 11 போலீசார் உட்பட குறைந்தது 29 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரம்புக்கனையில் போலீஸ் அதிகாரிகளின் நடத்தை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை அதிபர் சந்தன விக்ரமரத்ன தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல கொழும்பில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கே மாத்தறையில் பிரதான வீதியொன்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைப்பதற்கும், போக்குவரத்தை நிறுத்துவதற்கும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அதிகரித்து வரும் அன்றாட செலவுகளை எதிர்த்து ஏப்ரல் 20ம் தேதியன்று பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போது வரை இலங்கையில் டீசல் விலை லிட்டருக்கு ஏறக்குறைய 65 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பொது போக்குவரத்து கட்டணம் 35 சதவீதம் உயந்துள்ளது குறிப்பிடத்தக்கது.