கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்களின் விபரங்கள்!
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக சென்னை தாம்பரம்- நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக நெல்லை-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தற்போது இந்த ரயில்கள் எந்தெந்த ஊர்களுக்கு செல்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சிறப்பு இரயில்கள்
இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சுற்றுலா, இருப்பிடம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ரயில்வே வாரியம் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.
அதன்படி முன்பதிவில்லா சேவை கட்டணம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 22ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. இதனை தொடர்ந்து மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
அதன்பின் நாகர்கோவிலில் இருந்து 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இதே போல் தென்காசி வழியாக நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.