தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஜூன் 7 முதல் கடைகள் இயங்காது?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. மேலும் இது போன்ற பல்வேறு சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக மாநில துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு ஏற்பட்ட கூடுதலான செலவினம் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் நீண்ட காலமாக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அத்துடன் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஊதியம், ஓய்வூதியம், பணிவரன் வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் துணை தலைவர், இணை செயலாளர் உள்ளிட்டோர் இது தொடர்பாக கூறியதாவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவர்களுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு சலுகைகள் கிடைக்காமல் உள்ளது. அதனால் இதனை கண்டித்து வருகிற ஜூன் 7 முதல் 9ம் தேதி என 3 நாட்கள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி, மற்றும் சரியான எடையில் தரமான பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது.