சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஷபானா – ‘செம்பருத்தி’ சீரியல் பிரபலமான கதை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ என்ற ஒரேயொரு சீரியல் மூலம் மக்களின் விருப்பத்துக்கேற்ற நாயகியாக வலம் வரும் நடிகை ஷபானா கடந்து வந்த பாதை குறித்து இப்பதிவில் காணலாம்.
நடிகை ஷபானா
பொதுவாக கலை, இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழ் ரசிகர்கள் எந்தவொரு திறமையையும், அழகையும் கொண்டாடத் தவறுவதில்லை. அப்படி வெளி மாநிலங்களை சேர்ந்த தமிழ் மொழி அறியாத பல திரைத்துறை நட்சத்திரங்களுக்கும் நம் மக்கள் பலத்த வரவேற்புகளை கொடுத்து வருகின்றனர். அதே போல சினிமா அல்லது சின்னத்திரையில் ஒருவர் நடிக்கும் கதாப்பாத்திரம் அவரது அடையாளமாக மாறுவது நடிப்பு கிடைக்கும் பரிசாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஒரேயொரு சீரியல் மூலம் மக்கள் மனதில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் பிரபல சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜகான். கேரளாவை சொந்த ஊராக கொண்ட நடிகை ஷபானா ஷாஜகான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்த இவர் தனது அம்மா மற்றும் தம்பியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார். மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார் நடிகை ஷபானா.
மும்பையில் வசித்த போதே சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்திருந்த போதிலும் தனது தாய் மொழியான மலையாளத்தில் அறிமுகம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு, கடந்த 2016ம் ஆண்டு சூர்யா டிவியில்.ஒளிபரப்பான ‘விஜயதசமி’ என்ற மலையாள சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு தான் இவருக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ என்ற தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நிஜத்தில் துறுதுறு பெண்ணாக வலம் வரும் நடிகை ஷபானா ‘செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கனமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் சீரியலிலேயே எதிர்பாராத அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தார். மேலும் ‘செம்பருத்தி’ சீரியலில் வேறு மதத்தை சேர்ந்த கதாநாயகனுடன் ரொமான்ஸ் செய்வதை எதிர்த்து உருவான விமர்சனங்களை தாண்டியும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தனது நடிப்பின் மூலம் பெருமை சேர்த்துள்ளார் ஷபானா.
இந்த ஒரு தொடருக்கு மட்டும் இதுவரை பல விருதுகளை பெற்றிருக்கும் இவருக்கு தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான விஜயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து வரும் நடிகை ஷபானா தனது திருமணம் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.