விஜே முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வரை – ஹேமாவின் சின்னத்திரை பயணம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வரும் நடிகை ஹேமா, தனது மீடியா வாழ்க்கை, சின்னத்திரை அறிமுகம் போன்ற விஷயங்களை பற்றி பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹேமா
பொதுவாக வாழ்க்கையில் நாம் விரும்பும் எந்தவொரு விஷயமும் எளிமையாக கிடைத்து விடாது. நமக்கு கிடைக்கும் எந்தவொரு பலனுக்கும், ஏதாவது ஒரு விஷயத்தை கைமாறாக கொடுக்க வேண்டும். இது எல்லா துறைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான். ஆனால் சினிமா என்றவொரு விஷயத்தை பற்றி பேசும் போது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலையை சரிசமமாக ஈடு செய்வது சற்று கடினமான விஷயமாக இருந்து வருகிறது. இருந்தாலும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் சினிமா அல்லது சின்னத்திரையில் நடிக்க துவங்கி அதில் ஜெயித்து காட்டிய பலரை நாம் பார்க்க முடியும்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல், என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!
அந்த வகையில் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல், சின்னத்திரையில் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒரு முன்னணி நடிகை ஹேமா. ஆரம்பத்தில் வாய்ப்புக்காக அலைந்து தேடி, கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் மீனாவாக மக்களின் மனதை கவர்ந்து வரும் நடிகை ஹேமா தனது சின்னத்திரை பிரவேசம் பற்றி முதன் முறையாக ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுடன் மனம் திறந்துள்ளார். இது குறித்து நடிகை ஹேமா பேசும் போது, ‘கடந்த 2012ல் நான் மீடியா கேரியரை ஆரம்பித்தேன்.
ஆனால் அதற்கு முன்னதாக ‘கனா காணும் காலங்கள்’ ஆடிஷனில் நான் செலக்ட் ஆன பிற்பாடு, எனது அப்பா மீடியாவுக்கு செல்ல கூடாது என்று சொல்லி விட்டார். அதனால் அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து நான் சென்னையில் கல்லூரி படிப்பை படித்து கொண்டிருந்த போது, மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக பல்வேறு சேனல்களில் வாய்ப்பு கேட்டு ஏறி, இறங்கி இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து என் தோழி மூலமாக அவருக்கு கிடைத்த செய்தி வாசிப்பாளர் பணியை செய்ய துவங்கினேன்.
அந்த வகையில் 2012ம் ஆண்டு வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பணியை துவங்கினேன். தொடர்ந்து அதே சேனலில் ‘மண் பேசும் சரித்திரம்’ என்ற நிகழ்ச்சியில் ஆங்கராகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு, ஒரு 3 மாத காலம் நான் வேலை இல்லாமல் இருந்தேன். பிறகு சமூக வலைதளத்தில் கிடைத்த அறிவிப்பை வைத்து, சன் டிவியின் ‘சந்திரலேகா’ சீரியலுக்கு ஆடிசன் போய், நடிக்க ஆரம்பித்தேன். அப்போது 2013ம் ஆண்டில் எனக்கு ரூ.700 சம்பளம் கிடைத்தது. பிறகு அந்த சீரியல் ஒரு மாதமே ஒளிபரப்பாகி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத்து சிறிய ரோல்களுக்கு டப்பிங் செய்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
இப்படி இருக்கும் போது, விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான ‘ஆபிஸ்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் சன் டிவியில் பொன்னூஞ்சல், குலதெய்வம் போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தேன். இப்படி இருக்கும் போது நான் நடித்து வந்த சீரியல்களில் எல்லாம் திடீரென முடிந்து போக, 8 மாத காலம் வேலை இல்லாமல், கையில் காசு இல்லாமல், சாப்பாடு இல்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது, ‘மெல்ல திறந்தது கதவு’ சீரியல் தான். இந்த சீரியல் முடிந்ததும், எனக்கு திருமணம் ஆனது. பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்த சின்னத்தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.