தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது. இதில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் அடுத்தடுத்து பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அவர்களின் கல்வி நிலையிலும் பின்னடைவை சந்தித்தனர். அப்போது அரசு நோய்த் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி தொற்று பரவலை குறைத்தது. அதனால் கடந்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. அதனால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த நிலையில் தடுப்பு பணியின் ஒருபகுதியாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் விளைவாக மாணவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பித்தனர். அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெறத் தொடங்கியது. அதனால் நடப்பாண்டு 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்புக்கு பாட வாரியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்களுக்கு பாடங்களை விரைந்து முடித்து திருப்புதல் செய்யும் நோக்கில் சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பிரதி சனிக்கிழமை தோறும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.