பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு – தமிழக அரசு அறிவிப்பு!
பாரலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி ரொக்கப்பரிசு அளிக்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
ரொக்கப்பரிசு:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த சுமார் 54 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் இந்திய அணி வீரர்கள், ஒவ்வொரு நாளும் பதக்கங்களை குவித்து கொண்டுள்ளனர். பாராலிம்பிக் போட்டிகள் துவங்கிய 8 ஆவது நாளான இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர் சிங்ராஜ் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மாலை 3:55 மணியளவில் துவங்கிய உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டார். இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்து முன்னிலை வகித்த மாரியப்பன், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீ தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக ரியோ 2016 பாராலிம்பிக் போட்டியில் இவர் தங்கம் வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது டிவீட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் ‘தங்கமகன்’ மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடித் தந்திருக்கும் அவரைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன். ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் வென்று, ஒவ்வொரு இளைஞர் உள்ளத்திலும் ஊக்கத்தை விதைக்கும் அவர் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது எனப் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வெள்ளிப்பதக்கச் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் தொடரட்டும் என்று முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.