கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த திட்டம் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உதவித்தொகை வழங்கும் திட்டம்:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப் படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – மத்திய அரசு விளக்கம்!
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். அதாவது புதிய தேசியக் கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு, அதிகரித்து வரும் கல்விக் கடன் மற்றும் வீட்டுச் செலவினங்கள் (House hold Expenditure) ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த அறிவிப்பு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உயர்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இதையடுத்து 1990களுக்குப் பிந்தைய இந்திய சந்தைப் பொருளாதாரத்தில் இந்திய உயர்கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றன.
மேலும் இந்தியாவில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை கடந்த 2015-16ம் ஆண்டு 1.60 கோடியாக இருந்த நிலையில், 2019-20-ல் 1.89 கோடியாக அதிகரித்துள்ளது. இது, நல்லது என்றாலும் போதுமானதாக இல்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் உயர்கல்வி உறுதித் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது இந்த திட்டம் பெற்றோர்களின் வீட்டுச் செலவினங்களை குறைத்தாலும், உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எனவே, தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு மானியங்களை அதிகரித்தல், அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை வேகப்படுத்துவது, தனியார் கல்லூரி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பது, கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவது, விளிம்பு நிலை மாணாக்கர்களின் கல்வி உதவித் தொகையை அதிகரிப்பது போன்றவைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.