தமிழகத்தில் இம்மாவட்டத்திற்கு ஏப்ரல் 11 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ஏப்ரல் 11 ஆம் தேதியன்று தேர்த்திருவிழா நடைபெற இருப்பதால் அம்மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து நேத்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களும் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா – திருக்கல்யாண உற்சவம்! முன்பதிவிற்கு ஏப்ரல் 7 கடைசி நாள்!
நேற்று தான் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேத்திக்கடன்களுக்காக காப்பு கட்டினர். பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து பால்குடம், காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை முதலான நேத்திக்கடன்களை செய்வர். மேலும், திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி கோயிலில் நடைபெறும். கோயிலில் நடைபெரும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்க்க பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த கோவிலின் சிறப்பு அம்சமான தேர்த்திருவிழா ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல ஊர்களில் இருந்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்த வருவதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால் ஏப்ரல் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.