TNPSC உதவி இயக்குனர் காலியிடங்களுக்கான தற்காலிக பட்டியல் – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக கடந்த மே மாதம் 28ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
தேர்வு பட்டியல் வெளியீடு:
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு பிரிவுகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பொது பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி, நடந்து முடிந்த இந்த தேர்வில் மொத்தம் 1,293 பேர் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 272 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஜூலை 20 வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!
தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல் வெளியாகி இருக்கிறது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.