தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் சான்றிதழ் – கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகிறது.
கலைஞர் எழுதுகோல் விருது:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு உதவும் வகையிலும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2021ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கை விவாதத்தின் போது செய்தி தொடர்பு துறை சார்பாக சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் 1 மணி நேரம் கூடுதலாக செயல்படும் – அரசு அறிவிப்பு!
இதழியலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் அவர்களின் படைப்புகளை பாராட்டும் வகையில் இதழியலாளர்களுக்கு இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் பணி செய்தவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.