மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா – திருக்கல்யாண உற்சவம்! முன்பதிவிற்கு ஏப்ரல் 7 கடைசி நாள்!
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் பார்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்பனை செய்ய இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் அதற்கு இன்றில் இருந்து வருகின்ற 7 ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்:
தமிழகத்தில் கோவில் மாநகரம் மற்றும் தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரை நகரின் மையத்தில் அமைந்து உள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவானது மதுரை மக்களுக்கு பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரை திருவிழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்க உள்ளது. இந்த திருவிழாவானது நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனால் மதுரை மக்கள் மட்டுமில்லாமல் உலக நாடுகளில் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இரு வருடம் கழித்து நடைபெற உள்ள இந்த திருவிழாவை காண ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!
இந்த நிலையில் நாளை(ஏப்ரல் 5) ஆரம்பிக்கும் இந்த திருவிழாவானது வருகின்ற 16 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகின்ற ஏப் 14, தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெற உள்ளது. திருக்கல்யாண உற்சவத்தை காண பக்தர்களுக்கு 200, 500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 200 ரூபாய் கட்டணத்தில், அதிகபட்சம் 3 பேருக்கும், 500 கட்டணத்தில் அதிகபட்சம் 2 பேரும் அனுமதிக்கபட இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டண சீட்டு பெற வேண்டும். குறிப்பாக, 500 ரூபாய் கட்டண சீட்டு 2,500 பேருக்கும், 200 ரூபாய் கட்டண சீட்டு 3,200 பேருக்கும் மட்டுமே வழங்கப்பட உள்ளன. மேலும் ஒரே நபருக்கு இரண்டு கட்டண சீட்டுகளை விண்ணப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.maduraimeenakshi.org ஏப் 4 முதல் ஏப் 7 வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை பதிவேற்றப்பட வேண்டும். மொபைல் போன் எண், இமெயில் முகவரி கட்டாயம் தேவை. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தில், மார்பளவு போட்டோ இணைக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு மொபைல் போன் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக விண்ணப்பங்கள் வந்தால், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, சம்பந்தப்பட்டவருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மொபைல் போன் எண் தெரிவிக்காதவர்கள் அறியும் வண்ணம், கோவில் அலுவலக அறிவிப்பு பலகையில், ஏப் 8 காலை 11 மணி அளவில் அறிவிப்பு ஒட்டப்படும். கட்டண சீட்டு ஒதுக்கீடு பெற்ற விபரம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள், ஆன்லைனில் பதிவு செய்து, கட்டண சீட்டு தொகையை செலுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். மேலும் இந்த ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர். அடுத்தாக, திருக்கல்யாணத்தை இலவசமாக காண விரும்பும் பக்தர்கள், தெற்கு கோபுரம் வழியாக முன்னுரிமை அடிப்படையில் இடத்திற்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.விழாவிற்கு வரும் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க, கோவிலின் பிர்லா மந்திர் விடுதியில் நேரடி முன்பதிவு வசதியும் உண்டு.