கேரளாவில் கைதான மீரா மிதுனை சென்னை அழைத்து வந்த போலீசார் – தீவிர விசாரணை!
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட துணை நடிகை மீரா மிதுன் தற்போது தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு விசாரணை
தமிழ் திரையுலகில் திரைப்பட துணை நடிகையாக இருந்து வரும் மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். முன்னதாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியிலேயே இவரை சுற்றி பலவிதமான எதிர்மறை கருத்துக்கள் எழுந்து வந்தது. இதையடுத்து அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர், அவ்வப்போது திரைப்பட நடிகர்களை பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
சுதந்திர தின விழா சிறப்பு விருதுகள் 2021 முழு விபரம் – முதல்வர் முக ஸ்டாலின் கௌரவம்!
இதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், சமீபத்தில் தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களை பற்றி தவறான கருத்துக்களை முன்வைத்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்கள் புகார்களாக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மீரா மிதுன் மீது சுமார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை புலனாய்வு காவல் துறையினர் அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் காவல்துறையின் சம்மனை ஏற்றுக்கொள்ளாத அவர் தலைமறைவாகினார். இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், என்னை எவராலும் கைது செய்ய முடியாது என கூறி அவர் பரபரப்பை கிளப்பினார். இருப்பினும் கேரளாவில் இருந்த மீரா மிதுனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை தமிழகம் அழைத்து வந்த காவல்துறையினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குற்றப்பிரிவில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.