தமிழகத்தில் ரூ.100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை – இன்று முதல் அமல்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த பெட்ரோல் விலையில் சில மாற்றங்களை அறிவித்து அரசின் பட்ஜெட் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த வாகன எரிபொருள்கள் மீதான விலையை குறைப்பதாக தமிழக அரசின் புதிய பட்ஜெட் அறிக்கை அறிவித்துள்ளது. அதாவது நேற்று (ஆகஸ்ட் 13) துவங்கிய சட்டமன்ற பேரவையின் முதலாம் நாளில் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான புதிய திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கையின் போது பல விதமான அறிவிப்புகள் வெளியாகி இருப்பதன் மத்தியில், பெட்ரோல் விலை குறைப்பு தற்போது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் – வரலாற்றில் முதன்முறை!
தமிழகத்தில் பெருமளவு நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களின் எரிபொருள் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது. அதனால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் பெட்ரோல் மீதான விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் தான் தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில், பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைக்கப்படுவதாக ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் அதிகமாக விற்பனைக்கு செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த விலையில் மாற்றங்கள் கண்டு, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) முதல் பெட்ரோல் விலை ரூ.99.4 காசுகளாக விற்பனை செய்யபட்டு வருகிறது. இதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.49 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.94.39 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.