பாரசீக மற்றும் கிரேக்க படையெடுப்புகள்

0

 பாரசீக மற்றும் கிரேக்க படையெடுப்புகள்

சைரஸ் (கி.மு. 558 – கி.மு. 530)

  • அக்கமேனியப் பேரரசின் மிகச்சிறந்த வெற்றியாளராகத் திகழ்ந்தவர் மகா சைரஸ்.
  • இந்தியாவிற்கு எதிராக படையெடுத்த முதல் படையெடுப்பாளர் இவரேயாகும்.
  • இந்தியாவுக்குள் நுழைந்து காந்தாரப் பகுதியை கைப்பற்றினார்.
  • சிந்து நதிக்கு மேற்கிலிருந்த இந்தியப் பழங்குடிகள் அனைத்தும் அவரிடம் சரணடைந்தன.
  • கப்பம் கட்டவும் ஒப்புக்கொண்டன. அவரது மகன் காம்பிசிசுக்கு இந்தியாவின்மீது கவனம் செலுத்த நேரமில்லை.

முதலாம் டேரியஸ் (கி.மு. 522 – கி.மு. 486)

  • சைரஸின் பேரனான முதலாம் டேரியஸ் கி.மு. 518ல் சிந்து வெளியைக் கைப்பற்றினார்.
  • பஞ்சாப், சிந்து இரண்டும் இவரால் இணைத்துக் கொள்ளப்பட்டன. இப்பகுதி பேரரசின் இருபதாவது சாட்ரபி (மாகாணம்)யாக திகழ்ந்தது.
  • அக்கமேனியப் பேரரசின் மக்கள்தொகை மிகுந்த செழிப்புமிக்க மாகாணமாக அது திகழ்ந்தது.
  • சிந்து நதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஸ்கைலாஸ் தலைமையில் கப்பற்படையை டேரியஸ் அனுப்பிவைத்தார்.

செர்க்ஸஸ் (கி.மு. 465 – கி.மு. 456)

  • தனது வலிமையைப் பெருக்கிக் கொள்ள இந்திய மாகாணத்தை செர்க்ஸஸ் பயன்படுத்திக் கொண்டார். தனது எதிரிகளுடன் போரிடுவதற்காக, இந்திய காலாட்படை, குதிரைப்படை ஆகியவற்றை கிரேக்கத்துக்கு அனுப்பி வைத்தார்.
  • ஆனால், செர்க்ஸஸ் கிரேக்க்த்தில் தோல்வியைத் தழுவியதால் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. இத்தோல்விக்குப் பிறகு அக்கமேனியர்கள்,  இந்தியாமீது ஆக்ரமிப்பு கொள்கையைப் பின்பற்ற முடியவிலலை.
  • இருப்பினும், இந்திய மாகாணம் அவர்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்தது. கி.மு. 330ல் அலெக்சாந்தரை எதிர்த்துப் போரிடுவதற்காக மூன்றாம் டேரியஸ் இந்திய வீரர்களை பயன்படுத்திக் கொண்டார்.
  • இந்தியாமீது அலெக்சாந்தர் படையெடுத்தபோது பாரசீகர்களின் கட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்டிருந்தன என்றே கூறவேண்டும்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

பாரசீக படையெடுப்பின் விளைவுகள்

  • இந்தோ – ஈரானிய வர்த்தகம் வளர்வதற்கு பாரசீகப் படையெடுப்புகள் ஊக்கமளித்தன. மேலும், அலெக்சாந்தரின் படையெடுப்புக்கு இது கட்டியம் கூறியது.
  • வடமேற்கு இந்தியாவில் ஈரானிய எழுத்து வடிவமான கரோஷ்தி வரிவடிவம் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அசோகரது கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த வரி வடிவம் காணப்படுகிறது.
  • மௌரியர் கால கலையிலும் பாரசீகக் கலையின் தாக்கத்தைக் காணமுடிகிறது. குறிப்பாக, அசோகரது ஒற்றை கல்தூண்களும் சிற்பங்களும் இதற்கு சான்றாகும்.
  • அசோகரது கல்வெட்டு ஆணைகள், ஈரானிய செல்வாக்கினால் விளைந்தவை எனலாம். இந்தோ- மாசிடோனியத் தொடர்புகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இந்தோ – ஈரானியத் தொடர்பின் தாக்கம் பெரிது, பயனளிப்பதாக அமைந்தது.

இந்தியாவில் அலெக்சாந்தரின் படையெடுப்பு (கி.மு. 327 – கி.மு. 325)

அலெக்சாந்தர் படையெடுப்பின்போது அரசியல் நிலை

  • பாரசீகர்கள் படையெடுத்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாந்தர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.
  • அவரது படையெடுப்பின்போது வடமேற்கு இந்தியாவில் பல சிறு அரசுகள் இருந்தன. தட்ச சீலத்து அம்பி, அபிசார நாட்டு அரசன், ஜீலம், சீனாப் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸ் போன்ற முதன்மையான அரசர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்தனர்.
  • நிசா போன்ற பல குடியரசு நாடுகளும் இருந்தன. இந்தியாவின் அரசியல் ஒற்றுமை குறைந்த பகுதியாக வடமேற்கு இந்தியா விளங்கியதோடு ஆட்சியாளர்களும் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருந்தனர்.
  • பொது எதிரிiயை வீழ்த்துவதற்குக்கூட அவர்கள் ஒன்று சேரவில்லை. இருப்பினும், பல்முனை எதிர்ப்புகளை வெற்றிகொள்வது என்பது அலெக்சாந்தருக்கு எளிதாக இருந்தது என்று கூறமுடியாது.

படையெடுப்புக்கான காரணங்கள்

  • கி.மு. 334 ஆம் ஆண்டு தனது தந்தை பிலிப் மறைந்தபிறகு, அலெக்சாந்தர் மாசிடோனியாவின் அரசராகப் பதவியேற்றார்.
  • கி.மு. 330 ஆம் ஆண்டு அர்பேலா போரில், மூன்றாம் டேரியசை முறியடித்து பாரசீகம் முழுவதையும் கைப்பற்றினார். மேலும் கிழக்கு நோக்கி படையெடுத்து இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய மாகாணத்தைக் கைப்பற்றுவது அவரது நோக்கம்.
  • ஹெரோடோடஸ் போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருந்த இந்தியாவின் செல்வச் செழிப்பு அலெக்சாந்தரின் கவனத்தை ஈர்த்தது.
  • புவியியல் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வம் மற்றும் இயற்கையை ஆய்வு செய்தல் போன்ற காரணங்களாலும் அலெக்சாந்தர் இந்தியா மீது படையெடுத்தார்.
  • இந்தியாவிற்கு கிழக்கே தொடர்ந்து கடல் இருப்பதாகவும் அவர் நம்பினார். அது அக்காலத்திய புவியியல் கருத்தாக இருந்தது.
  • எனவே, இந்தியாவை கைப்பற்றுவதன்மூலம் உலகத்தின் கிழக்கு எல்லைகலை கைப்பற்றிவிடலாம் என்றும் அவர் கனவு கண்டார்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

ஹைடாஸ்பஸ் போர்

  • கி.மு. 327 ஆம் ஆண்டு அலெக்சாந்தர் இந்துகுஷ் மலைகளைக் கடந்து, கிட்டத்தட்ட எட்டு மாத காலம் அங்கிருந்த பழங்குடிகளிடம் போரிட்டார்.
  • கி.மு. 326ல் அவர் படகுப்பாலம் அமைத்து சிந்து நதியைக் கடந்தார். தட்சசீலத்து அம்பி அவரை அன்புடன் வரவேற்றார். அங்கிருந்துகொண்டே, போரஸ் மன்னரை சரணடையுமாறு கோரினார்.
  • ஆனால், போரஸ் அதற்கு உடன்படாமல், போரிடுவதற்கு தயாரானார். பின்னர்,  அலெக்சாந்தர் தட்சசீலத்திலிருந்து புறப்பட்டு ஹைடாஸ்பஸ் (ஜீலம்) நதிக்கரையை அடைந்தார்.
  • நதிக்கு அப்பால் போரசின் பெரும்படை அணிவகுத்திருப்பதைக் கண்டார். ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடப்பது எளிதாக இருக்கவில்லை.
  • சிறிது நாட்கள் காத்திருந்த பின்னர், அவர் ஜீலம் நதியைக் கடந்து காரிச்சமவெளியில் பேரரசின் படைகளோடு போரிட்டார். இதுவே புகழ்மிக்க ஹைடாஸ்பஸ் போர் எனப்படுகிறது. மிகவும் கடுமையான போராகவே அது காணப்பட்டது.
  • வலிமையான படைகள் இருந்தபோதிலும், இறுதியில் போரஸ் தோற்றுப் போனார். இந்திய அரசனின் வீரத்தையும் தலைமைப் பண்பையும் கண்டு வியப்பெய்திய அலெக்சாந்தர் போரசை பெருந்தன்மையுடன் நடத்தியதோடு மீண்டும் அரியணையில் அமமர்த்தினார்.
  • அலெக்சாந்தர் வழியிலிருந்த பழங்குடியினரை முறியடித்தவண்ணம் தனது படைகளுடன் பியாஸ் நதிவரை தொடர்ந்து முன்னேறினார். மேலும் முன்னேறி கங்கைச் சமவெளி நோக்கி செல்ல விரும்பினார். ஆனால் அவரது வீரர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். நீண்டகாலமாகப் போரிட்டு அவர்கள் களைப்புற்றிருந்தனர். எனவே தாயகம் திரும்புவதிலேயே குறியாக இருந்தனர்.
  • அலெக்சாந்தரால் அவர்களை சமமாதானப்படுத்த முடியாமற்போனதால் தாயகம் திரும்ப முடிவு செய்தார். இந்தியாவில் தாம் கைப்பற்றிய பகுதிகளை ஆட்சிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
  • சிந்து முதல் பியாஸ் வரையிலான பகுதிகளை மூன்று மாகாணங்களாகப் பிரித்து அவற்றுக்கு ஆளுநர்களை நியமித்தார். கி.மு. 326 அக்டோபரில் அவரது படைகள் இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கின.
  • தாயகம் திரும்பும் பயணம் மிகவும் கடுமையானதாகவே இருந்தது. குடியரசுப் படைகள் பல அவரது படைகளை தாக்கின. ஒருவாறு சமாளித்து அவர் சிந்து நதியைக் கடந்தார்.
  • தாயகம் செல்லும் வழியில் பாபிலோனியாவில் அலெக்சாந்தர் நோய்வாய்ப்பாட்டு கி.மு. 323 ஆம் ஆண்டு மறைந்தார்.

அலெக்சாந்தர் படையெடுப்பின் விளைவுகள்

  • மௌரியர்களின்கீழ் வடஇந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டதே அலெக்சாந்தர் படையெடுப்பின் உடனடி விளைவாகும்.
  • சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது. இந்தியா, கிரேக்கம் ஆகியவற்றுக்கிடையே நேரடித் தொடர்பு ஏற்படுவதற்கு அலெக்சாந்தர் படையெடுப்பு வழிவகுத்தது.
  • அவர் ஏற்படுத்திய புதிய வழிகள், கடல் ஆய்வுகள் போன்றவற்றால் இந்தியாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தகத் தொடர்புகள் மேலும் பெருகின.
  • அவரது அகால மரணத்தினால், வடமேற்கு இந்தியாவை தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவரத விருப்பம் நிறைவேறாமல் போயிற்று.
  • சந்திரகுப்தரின் கீழ் மௌரியப் பேரரசு விரிவடைந்தமையால், சிந்துவெளியில் அவர் ஏற்படுத்திய ஆதிக்கம் சொற்பகாலமே நீடித்தது.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!