தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – விரைவில் புதிய சட்டம்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஆன்லைன் ரம்மி:
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால் இணையதள விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிப்பது அதிகமாகி விட்டது. அத்தகைய விளையாட்டுகளில் ஒன்று தான் ரம்மி. லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மக்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு விளையாட்டு மூலம் பணம் கிடைக்கிறது என்றால் அதற்கு நாமும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானோர் தங்களது பணத்தை முதலீடு செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அதே நேரம் சில நேரங்களில் பணத்தை இழந்தும் வருகின்றனர். கடன் வாங்கி மற்றும் தன்னிடம் உள்ள பொருட்களை விற்று ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த பணத்தை திரும்ப பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்து வந்தது. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், போலீஸ் கூடுதல் இயக்குநர் வினித் தேவ் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
இவர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.