தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? ஜூன் 16ம் தேதியன்று போராட்டம் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர் சங்கத்தினர்கள், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
நீண்ட நாட்களாக மத்திய மற்றும் சில மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வரும் ஒரு முக்கிய விஷயம் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தது தான். ஏனென்றால் அரசாங்கம் அமல்படுத்திய புதிய அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் போதுமான அளவு பலன்கள் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விரும்புகின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் நிதி உள்ளிட்ட சில சிக்கல்கள் இருப்பதால் இதனை செயல்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘CPS ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் அரசு ஊழியர்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதாவது, முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. இப்போது மாநிலத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை காரணமாக வைத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று CPS ஒழிப்பு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக இப்போது அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 16ம் தேதியன்று நடத்தப்பட இருக்கும் இந்த போராட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 2022 ஜனவரி 1 முதல் 3% அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்குதல், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பை பணப்பலனாக மாற்றும் உரிமையை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்ரமணியன் அவர்களின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பலன் வழங்குதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.