தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – நிதியமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழக நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2004 ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் பல்வேறு புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது. அதன்படி இனி ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களின் பணி காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் வந்தது. தற்போது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதிய திட்டத்தில் எதுவும் மறைக்காமல், ஒளிவுமறைவின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரம் ஏற்கனவே கொள்கை விளக்கக் குறிப்பின் மூலம் மாநில சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓய்வூதிய திட்டத்தில் ஆண்டு வட்டி வீதம் 7.1ஆக வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.