தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – பாடத்திட்டத்தில் புதிய மாற்றம்!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இத்திட்டத்தின் கீழ் பயின்று அடுத்த வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எண்ணும் எழுத்தும்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கொரோனா விடுமுறை காரணமாக 2ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக 3ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதனால் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை பள்ளிகள் சரி செய்வதற்காக தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம், தமிழகத்தில் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதிற்குட்பட்ட அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவு பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடைமுறையில், பாடங்கள் சொல்லி கொடுக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளையாட்டு வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மாணவர்களுக்கு எண்கள், எழுத்துக்களை அறிமுகம் செய்தல், பிழையின்றி வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதம் உள்ளிட்டவை கட்டாயமாக மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் தொடக்கம்? அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குள் நுழையும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் மாணவர்கள் பாடங்களை சிக்கலின்றி படிக்க ஏதுவாக இருக்கும். இந்த பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்படி இது தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்படும். அதன்பின் பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.