தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!
தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் தவிர 476 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் அங்கீகாரம் பெறும் கல்லூரிக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2022-23) இணைப்பு அங்கீகாரம் கோரி 476 தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்தன. இந்த கல்லூரிகளில் பல்கலை குழுவினர் கடந்த மே, ஜூன் மாதங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.
Exams Daily Mobile App Download
அதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுமையான கட்டமைப்பு வசதிகளின்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கல்லூரிகளை நடத்துவதற்கான முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கல்லூரிகள் 2 வாரத்துக்குள் உரிய விளக்கம் அளிக்கவும், விதிகளின்படி அடிப்படை வசதிகள் செய்தல், உரிய ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அந்த கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
விரைவில் பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விஷயம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறைகளை சரி செய்ய 19ம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், அவற்றை சரி செய்யவில்லை எனும் பட்சத்தில் அந்த கல்லூரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டால், பிஇ, பிடெக் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சேர மறுப்பார்கள். அதன் மூலம் மேற்கண்ட பொறியியல் கல்லூரிகள் பாதிக்கப்படும் அல்லது மாணவர்கள் சேர்க்கையின்றி மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.