இனி வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் கொரோனா பேரலை தொற்று காரணமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, அத்தியாவசியமற்ற இயக்கங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி உள்ளது.
முழு ஊரடங்கு
தற்போது அதிதீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று வழக்குகளின் எழுச்சிக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சனிக்கிழமை அதாவது இன்று (ஜன.15) முதல் யூனியன் பிரதேசத்தின் (UT) 20 மாவட்டங்களிலும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சில மாத கால இடைவேளைக்கு பிறகு ஜனவரியில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்த பிறகு, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜம்மு காஷ்மீரில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் அருண் குமார் மேத்தா தலைமையிலான மாநிலச் செயற்குழு வெளியிட்டுள்ள உத்தரவின் படி, ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் இன்று (ஜன.15) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதனால் வார இறுதி நாட்களில் மக்களின் அத்தியாவசியமற்ற இயக்கங்களுக்கு அரசு முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது தினசரி கொரோனா வழக்குகளில் காணப்படும் சீரற்ற போக்கு மற்றும் அதிகரித்து வரும் பாசிட்டிவிட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்வதைத் தவிர கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த ஊரடங்கின் போது அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்கு முழுக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜன.16) முழு ஊரடங்கு அமல் – போலீசார் தீவிர கண்காணிப்பு!
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று (ஜன.14) ஒரு நாளில் அதிகபட்சமாக 2,456 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனுடன் 5 கோவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறைகள் மற்றும் மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.