PPF திட்டத்தில் உச்ச வரம்பு, வட்டி விகிதம் உயரவில்லையா? ஏமாற்றத்தில் சாமானிய மக்கள்!
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் PPF திட்டத்தில் உச்ச வரம்பு, வட்டி விகிதம் உள்ளிட்டவை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகாததால் சாமானிய மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
PPF திட்டம்:
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக சாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் வருமான வரி விலக்கு, வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அண்மையில் உயர்த்தியது.
Follow our Instagram for more Latest Updates
அதனால், பொது வருங்கால வைப்பு (PPF) நிதி திட்டத்திலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என சேமிப்புதாரர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சாமானிய மக்கள் எதிர்பார்த்த PPF சேமிப்பு திட்டம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தற்போது, PPF சேமிப்பு திட்டத்தில் வங்கிகளில் உள்ள FD சேமிப்பு திட்டத்தை விட அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது.
அதன்படி இந்த ஆண்டும் PPF திட்டத்திற்கு 7.1 % வட்டி விகிதம் வழக்கம் போல் வழங்கப்படுகிறது. அதே போல, PPF திட்டத்தில் கிடைக்கும் வரிச் சலுகை, வரி விலக்கும் கிடைக்கும். இதே போல் அதிகபட்ச முதலீடாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த உச்ச வரம்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் வெளியாகாததால் PPF சேமிப்புதாரர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.