கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் ஆதிக்கம் – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது நிபா வைரஸின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பு
கேரளா மாநிலத்தில் தற்போது நிலை வரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில், நிபா வைரஸ் பாதிப்பும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்புகளில், பாதியளவு கேரளாவில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சூலூர் பகுதியில் உள்ள 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகம் – கேரளா இடையே பொது போக்குவரத்திற்கு தடை? அமைச்சர் விளக்கம்!
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று (செப்டம்பர் 5) உயிரிழந்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவில் உருவான இந்த நிபா வைரஸ், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான நிபா வைரஸ் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் உருவெடுத்துள்ள நிபா வைரஸ் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கேரளா – தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில் சுகாதார அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ‘கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நிபா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களது சோதனை மாதிரிகளை, 48 மணி நேரத்திற்குள் சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் அல்லது புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் கேரளாவின் அண்டை பகுதிகளில் இருக்கும் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய எல்லை பகுதிகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா – 219 பேர் உயிரிழப்பு!
காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சனை போன்ற நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள், அவர்களின் பரிசோதனை முடிவை சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். தவிர அவர்களின் ரத்தம், சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை எடுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அதனை முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக கையாள வேண்டும். இந்த பரிசோதனை மாதிரிகள் 2 – 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். பரிசோதனை முடிந்ததும் 48 மணி நேரத்திற்குள் அதன் முடிவுகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.