TNPSC உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் TNPSC உள்ளிட்ட அனைத்து வகையான அரசுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் அளித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
புதிய செயலி
இன்றைய கால கட்டத்தில் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது துவங்கி நேர்காணலில் கலந்து கொள்வது வரைக்கும் அனைத்துமே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசுத்துறைகள் கூட இப்போது ஆன்லைன் சேவைகளை அதிகளவு செயல்படுத்த துவங்கி விட்டது. அந்த வகையில், இப்போது வரை அரசுத் தேர்வுகளுக்கு பலரும் ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக தான் விண்ணப்பங்களை செலுத்தி வருகின்றனர். இதில் விண்ணப்பிக்கும் போது அவ்வப்போது சர்வர் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார்களும் எழுந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இப்படி புகார்கள் வரும் ஒவ்வொரு முறையும் அதை சரி செய்வதற்கு, அரசுக்கு சில காலம் தேவைப்படுகிறது. இதனால் தேர்வுக்கான விண்ணப்பங்களை செலுத்துவதற்கு காலக்கெடுவை நீடிக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இது போன்ற சர்வர் கோளாறுகளை விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்ட காரணத்தால் ஆன்லைன் விண்ணப்பங்களை செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இப்போது இந்த பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்கு, TNPSC உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் அளித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழகத்தில் TNPSC உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும். மேலும், சென்னை திருமங்கலத்தில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.