தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களும்/ ஆசிரியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சேகர் மற்றும் சீர்காழி வட்டார பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து:
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ( பழைய ஓய்வூதிய திட்டம்) ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு தான் வந்தது. இதனால் அதிகமானோர் பயன் பெற்று வந்தனர். இதற்கிடையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் நிதி சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் மாதமாதம் ஓய்வூதியம் வழங்காமல் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கப்படும்.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மேலும் துணைத்தலைவர் முத்துராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் தங்கசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர். இதை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் உள்ளிட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.