தமிழகத்தில் செப்.1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் வீதம் குறைந்து வந்துள்ளதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டுமாக திறக்க அனுமதி கொடுத்துள்ள அரசு, அதற்கான வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அங்கன்வாடி திறப்பு
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை பரவலால் தமிழகத்தில் செயல்பட்டு வந்த பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா சூழல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 4 மாத காலமாக மூடப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களையும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களில் ஊழியர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, அங்கன்வாடி மையத்துக்கு வரும் பணியாளர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு கைகளை சுத்திகரிப்பான் கொண்டு துடைக்க வேண்டும் எனவும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஞாயிறு தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக தினமும் காலை 11.30 முதல் 12.30 மணிக்குள் மதிய உணவை வழங்க வேண்டும். அதிலும் 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு சூடான உணவை அளிக்க வேண்டும். ஊழியர்கள் கண்டிப்பாக விரல்களில் நகப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.