தமிழகத்திற்கு புதிய ஆபத்து, மீண்டும் ஊரடங்கு அமலாகிறதா? சுகாதாரத்துறை தகவல்!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக பிஏ5 தொற்று வகை தமிழ்நாட்டில் பரவி உள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
சுகாதாரத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கடந்த வருடம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உயிர் பலி குறைந்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி பாதிப்பு 26 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது. அதன் பிறகு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் குறைந்தது.
Exams Daily Mobile App Download
இதனால் அரசு விதித்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கி கொள்ளப்பட்டது. கொரோனா வெகுவாக குறைந்த காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முக கவசம் கட்டாயம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் நிறைய பேர் இதை கடைப்பிடிப்பதில்லை. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த பரவலுக்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழு பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா 3வது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஓமிக்ரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் 8 வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஓமைக்கிரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே பிஏ5 வகை கொரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.