தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய புதிய சட்டம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, இந்த விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டம்
பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்து, கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின் படி ஆன்லைன் விளையாட்டுகளை பொதுவாக தடை செய்ய முடியாது என கூறி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று (ஆகஸ்ட் 3) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன் முடிவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 13 வரை நீட்டிப்பு!
மேலும் அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் பொதுவாக தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இதற்கான புதிய சட்டத்தை உருவாக்கலாம் என அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க ஒரு புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தி வந்தார்.
TN Job “FB Group” Join Now
ஆனால் அப்போதிருந்த அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசரமாக ஒரு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உரிய விதிமுறைகள் மற்றும் போதுமான காரணங்கள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கொடுத்துள்ளது. இந்நிலையில் உரிய விதிமுறைகள் மற்றும் காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்டம் தமிழகத்தில் இயற்றப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.