இளங்கலை நீட் நுழைவுத் தேர்வை மாணவர்கள் ஆண்டுக்கு இருமுறை எழுதலாமா? மத்திய அரசின் பதில் என்ன?
நாடு முழுவதும் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இளங்கலை நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை எழுதலாமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு பதில் அளித்ததை பற்றி விரிவாக பார்ப்போம்.
நீட் தேர்வு
இந்தியா முழுவதும் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளை பயில தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தற்போது இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு (NEET UG Exam 2023) வருகிற மே 7ம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு எழுத மாணவர்கள் வருகிற ஏப்ரல் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளங்கலை நீட் நுழைவு தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்கள் எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இவர் கூறியதாவது, நீட் நுழைவுத் தேர்வை மாணவர்கள் ஆண்டுக்கு இரு முறை எழுதுவதற்கான வாய்ப்பளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.