தமிழகத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் – அதிர்ச்சியில் மக்கள்! பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்!
தமிழகத்தில் தீவிர உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் நடுக்கத்துடன் கூடிய மர்ம காய்ச்சல் பலருக்கும் பரவி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்ம காய்ச்சல்:
தமிழக மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வரும் வேளையில் அடுத்த தாக்குதலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், நடுக்கம், பசியின்மை உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவர்களுக்கு, டெங்கு, மலேரியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் இத்தகைய பாதிப்புகள் இல்லை என்பது தெரிய வந்தது. . மர்ம காய்ச்சல் நோய்க்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் முயன்று வருகின்றனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் சிலர், சுயநினைவை இழக்கும் நிலைக்கும் சென்று விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகிச்சையில் உள்ளோர் மற்றும் சிகிச்சை பெற்று திரும்பியோரின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், காய்ச்சலுக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்று மருத்துவ பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பரவி வரும் உடல்நல பாதிப்புகள் கோடை வெயிலின் தாக்கமா என்று ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய சூழலில் கோடை வெயிலில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளநீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை அதிகம் பருக வேண்டும். மாமிசங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால், சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.