IPL சீசன் 15: மும்பைக்கு பதிலாக சூரத்தில் பயிற்சி மேற்கொள்வது ஏன்? CSK பயிற்சியாளர் விளக்கம்!
வரும் மார்ச் 26ம் தேதியுடன் கோலாகலமாக துவங்க இருக்கும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்கு முன்னதாக தற்போது சூரத்தில் பயிற்சி ஆட்டத்தை துவங்கி இருக்கும் காரணத்தை CSK அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்திருக்கிறார்.
CSK அணி
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறது. அந்த வகையில் IPL போட்டிகளில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று மற்றும் நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த முறை தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இப்போது புதிய சீசனில் பல புதிய இளம் வீரர்களுடன் போட்டிக்களம் காண இருக்கும் CSK அணி, தனது பயிற்சி ஆட்டத்தை சூரத்தில் மேற்கொண்டு வருகிறது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
இதற்கான காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, ஐபிஎல் 2022 லீக் சீசனை பொருத்தளவு மும்பை (55 போட்டிகள்) மற்றும் புனே (15 போட்டிகள்) உள்ளிட்ட மகாராஷ்டிராவின் 5 மைதானங்களில் வைத்து மொத்த போட்டிகளும் நடைபெற இருக்கிறது. ஏனெனில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் விமானப் பயணத்தின் அபாயத்தை தவிர்க்க BCCI விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பயிற்சி ஆட்டத்திற்காக பெரும்பாலான அணிகள் மும்பையை அடைந்துவிட்டன.
அதே நேரத்தில் வசதிகளுக்கு ஏற்ப பல அணிகள் பயிற்சிகளையும் தொடங்கிவிட்டன. இருப்பினும், நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கே அணி தனது பயிற்சி முகாமை மும்பையிலிருந்து சுமார் 278 கிமீ தொலைவில் உள்ள சூரத்தில் அமைத்துள்ளது. இது குறித்து CSK தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறுகையில், ‘மும்பையில் உள்ள சவால் என்னவென்றால், அனைத்து அணிகளும் அங்கு பயிற்சி பெறுகின்றன. எனவே, நாங்கள் சூரத்திற்கு வருவதை சிறப்பாக உணர்ந்தோம். ஏனென்றால் சிவப்பு மண் மற்றும் காலநிலையின் அடிப்படையில் மும்பைக்கும், சூரத்திற்கும் ஒரே மாதிரியான நிலைமைகள் உள்ளன.
இது மும்பையை விட வெகு தொலைவில் இல்லை. இந்த மைதானத்தை பொருத்தளவு திறந்த விக்கெட்டுகள் மற்றும் நீண்ட நெட் அமர்வுகளை பெற்றிருப்பது மிகவும் சிறப்புமிக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் IPL 2022 போட்டிகளுக்காக 14 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த சீஸனின் பெரும்பகுதியை இழக்க நேரிடும் என நம்பப்படுகிறது. தவிர ருதுராஜ் கெய்க்வாட் மணிக்கட்டு காயத்தில் இருந்து மீண்டு கடந்த வாரத்தில் தான் CSK அணியில் இணைந்திருக்கிறார். தற்போது ஐபிஎல் 2022 தொடக்க ஆட்டத்தில் CSK கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.