தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல் – ஜூன் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் வேகமெடுத்து வரும் சூழலில் ஜூன் 12ம் தேதியன்று இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் வேகமெடுத்து வரும் சூழலில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. இப்போது அதிகரித்து வரும் புதிய பாதிப்புகள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘இந்தியாவில் இன்று 40% கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவு பதிவாகி வருகிறது.
தமிழகத்திலும் கூட கடந்த மாதம் முதல் கொரோனா புதிய பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகமாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் கொரோனாவுக்கு ஆளாகி இருக்கின்றனர். இப்போது BA4, BA5 போன்ற புதிய பாதிப்புகள் கொரோனா 4ம் அலைக்கான ஆரம்பம் என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால் முகக்கவசம் அணிவது அவசியம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.
Exams Daily Mobile App Download
இது தவிர கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பொது மக்கள் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் ஜூன் 12ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. இதை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.